
திருச்சி மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை.மண்ணச்சநல்லூர் அருகே பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட சுற்ற வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வருவதாக திருச்சி மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ் பி உத்தரவின்படி மண்ணச்சநல்லூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பெரியமணி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கார் டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கும்பகோணம் ஆடுதுறை கிராமத்தில சேர்ந்த ராஜா(28) மற்றும் அவரது நண்பர் திருச்சி ரங்கம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(28) ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு நபர்களையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
