தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் 238 கிலோ கஞ்சாவை திருச்சிற்றம்பலம் போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்தனர்.
திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரகசிய தகவலின் பேரில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 7 மூட்டைகளில் 238 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் சோதிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் சீனிவாச பெருமாள் ( 25) திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்தபுரம் ஆறுமுகம் மகன் முத்துமாலை (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது, சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் கஞ்சா மூட்டைகளை கொடுத்து அனுப்பியதாகவும், இதை கட்டையங்காடு பகுதியில் வந்து ஒருவர் வந்து பெற்றுக் கொள்வார் என தெரிவித்ததாகவும் அதற்குள் போலீசாரிடம் பிடிபட்டு விட்டோம் என தெரிவித்துள்ளனர்.
கஞ்சா மூட்டைகள் சென்னையில் இருந்து திருச்சி – புதுக்கோட்டை பட்டுக்கோட்டை வழியாக கட்டையங்காடு பகுதிக்கு கடத்தி வரப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சா பொட்டலங்கள் சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . பிடிபட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது .
